Pages

December 11, 2010

குழந்தைகளா ?களிமண் பொம்மைகளா?

 
 
ரொம்ப  நாளா என் மனசை உறுத்திகிட்டே இருந்த ஒரு விஷயம் ... இன்றைக்கு வேறு ஒருத்தரின்  எழுத்துக்கள் மூலமாக ... 
 
 
புகழ் என்றால் தொலைக்காட்சியில், திரைப்படங்களில் தோன்றவேண்டும்.முகம் தெரியவேண்டும்.ரோட்டில் போவோர் வருவோர் உங்கள் குழந்தைகளின் முகம் பார்த்து இளிக்கவேண்டும். தாங்கள்தான் அவர்களின் பெற்றோர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும். பெரும் பணம் குறுகிய காலத்திலேயே சம்பாதிக்க வேண்டும். இதுமட்டுமே உங்களின் மனதில் லட்சியமாய் இருக்கிறது. அவர்கள் புகழ் சின்னமாக்கப்படுவதின் (branding) மூலம் நீங்கள் பேர் பெற விரும்புவது ஒருவகையான அடிமைத்தொழில் என்றே கருதத்தோன்றுகிறது.  

குழந்தைகள் உங்கள் வழியே உருவானவர்கள், உங்களுக்காக உருவானவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வார்த்தைகளை நீங்கள் அறிந்ததுண்டா? குழந்தைகளுக்கான உலகம் (அவர்கள் எதிர்காலம் அல்ல) பற்றி ஏதாவது அறிவீர்களா நீங்கள். எப்பொழுது பார்த்தாலும் அவர்களை மதிப்பெண்கள் பெறவும், பரிசுகளைக் குவிக்கவும், புகழ்களை அள்ளிக்கொண்டு வரவுமே நிர்பந்திக்கும் நீங்கள் உருவாக்குவது மனிதம் நிறைந்த மனிதர்களை அல்ல, எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய நிறைய பணம்  அல்லது புகழ் சம்பாதித்து தரும் இயந்திரங்களை.  

சிறு வயதில் தாங்கள் இப்படியெல்லாம் வியாபாரநோக்கோடு வளர்க்கப்பட்டதை உண்ர்ந்து பிள்ளைகள் நாளை உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்பொழுது நீங்கள் கையாலாகவதராக கூனிக் குறுகி நிற்கவேண்டியிருக்கும்.  உங்கள் பேராசையை அவர்கள் லட்சியமாக விதைப்பதற்கு எதிர்காலத்திற்கான வித்து என்பது மனசாட்சியை தர்க்கம் செய்து ஏமாற்றுவது.  இங்கு ஹன்னா அரெண்ட் கூறும் ஓர் உளவியல் விளக்கத்தை குறிப்பிடுகிறேன் “காலத்தினூடாக நீடித்து இருப்பது பூமியில் இறப்பற்ற வாழ்வு” இருப்பு குறித்த அச்சமே வாரிசு உருவாக்கத்திலும் அவர்கள் மூலம் முத்திரைப் பதிக்கும் செயல்களிலும் (ஆணாதிக்க கண்ணோட்டத்துடனும், அவர்களின் நலனுக்காகவும்) ஈடுபட காரணமாய் அமைகிறது.  இந்த உளவியல் காரணங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் முதலாளிகள். குழந்தை வளர்ப்பை நீங்கள் அடிமைத்தனமாய் மாற்றும்பொழுது பெற்றோர்களாகிய நீங்கள் அக்குழந்தைகளுக்கு முதலாளிகள்.

எப்பாடுபட்டாவது தன் பிள்ளையை எல்லோருக்கும் தெரிந்தவராக ஆக்கும் முயற்சியில் இன்று பெற்றோர்களாகிய நீங்கள் முழு முனைப்புடன் ஈடுபடுகிறார்கள். ஆக இதில் குழந்தைகள் நலனைவிட பெற்றோர்களின் பேராசையே ஓங்கி இருக்கிறது.  அதன் விளைவு குழந்தைகள் என்ற பெயரில் நீங்கள் வளர்ப்பது பொருளாதார அடிமைகளையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெற்றோர்களே குழந்தைகளுக்கான நலம் என்பதில் அவர்களுக்கு நீங்கள் அறிமுகம் செய்யும் அணைத்துமே பணம், புகழ், வசதி வாய்ப்புக்களை பெறுவதற்கான ஒன்றாய் மட்டுமே இருக்கிறதே ஏன்? பெரும்பாலும் இவை நடுத்தர, பணக்கார படிநிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான மேடைகளாக உள்ளனவே? தெருவுக்குத் தெரு குழந்தைகளுக்கான பல்வேறு பயிற்ச்சி திட்டங்கள் செயல்படுகின்றன. குழந்தைகள் மூளை வளர்ச்சி குறித்து வரைபடம் வரைந்து படங்கள் காட்டி ஏதேதோ சொல்லி அச்சுறுத்துகிறார்கள். இதன் விளைவு காலையில் பள்ளி, வீடு திரும்பியவுடன் மற்ற வகுப்புகள். இயந்திரங்களுக்கு கூட சுமை (load)  பொருக்கும் அளவு என்று ஒன்று உள்ளது ஆனால் குழந்தைகளுக்கு?

இது அறிவை வளர்க்கும் பயிற்சிகள் என்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கும் அவை தேவை தானே. அப்படி அது மிக மிக அவசியம் என்றால் அரசாங்கமே அவற்றைப் பாட திட்டத்தில் சேர்ப்பார்கள் தானே? ஊடக நிகழ்ச்சிகளுக்காக 24 மணி நேரமும் சிந்திக்கும் பெற்றோர்களே இதைப்பற்றி யோசிக்க நேரம் கிடைக்குமா உங்களுக்கு?

பொருளாதாரத்தை மட்டுமே குறிவைக்கும் பண்டங்களை சந்தைப்படுத்த ஊடகங்கள் தேவை. அவ்விளம்பரங்களைப் பெற ஊடகங்கள் T.R.P*  என்ற ஒரு தர மதிப்பீட்டில் முன்னணியில் இருக்கவேண்டும் அதற்கு மக்களும் பங்குபெறும் நிகழ்ச்சியாக இருந்தால் நம் முகம், நமக்கு வேண்டியவர் முகம் அதில் தெரிகிறதே என்று வாயைப் பிளந்துக்கொண்டு நாம் பார்க்கச்செய்யும் நிகழ்ச்சிகளே மெய்மை நிகழ்ச்சிகள். அதன் தற்போதைய பலி குழந்தைகள்.  இந்த தரங்கெட்ட செயலுக்கு பெற்றோர்களாகிய நீங்கள்  துணை புரிகிறீர்கள்.

பீட்சாவும், பாஸ்தாவும் அறிந்த உங்கள் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் உண்ணும் ஈ மொய்த்த மிட்டாய்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.  தங்கள் பெற்றோரின் பொருளாதார சூழல் அறிந்து அக்குழந்தைகள் அதை உண்டே திருப்திக்கொள்வார்கள். உங்கள் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முத்திரையைச் சொல்லி அப்பொருளை வாங்கிக் கொடுத்தாலே ஆயிற்று என்று அடம் பிடிக்கும். நீங்களும் “என் குழந்தை எது கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன்” என்று மார்தட்டிக்கொள்ள அதை வாங்கிக்கொடுப்பீர்கள். பின் தொடர்ந்து அது கேக்கப்போகும் பொருட்களுக்காக ஓடி ஓடி உழைப்பீர்கள். வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுப்பதென்பது எதிர்காலத்தில் உங்களை அவர்கள் கைவிட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தினால் என்றும் கருதலாம்.  இப்படி எல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்க்கப்படும் நகரக் கலாச்சாரத்தின் பெரிய சாதனை ‘முதியோர் இல்லம்’.  அடியும் உதையும் வாங்கி புழுதிக்கு மத்தியில் வளர்க்கப்படும் ஊர்கலாச்சாரத்தில் முதியோர் இல்லங்களைக் காண்பது அரிது.  ஆனால் அதையும் (இலவச) தொலைக்காட்சிகள் குலைத்துவிடும் ஆபத்து தொலைவில் இல்லை.

இறுதியாக பெற்றோரிடம் சில கேள்விகள்:

  1. பொது மேடைகளில் புகழுக்காய்,காமப் பாடல்களை பெரியவர்களுக்கேற்ற முகபாவனையுடன் உதடுகளை அசைக்கும் உங்களது செல்லக் குழந்தைகளுக்கு அவற்றின் அர்த்தங்களை வரிக்கு வரி விளக்கியதுண்டா?
  2. அச்சிறுமி அல்லது சிறுவனுக்கு பாலியல் கல்வி பற்றி என்றாவது தாங்கள் வகுப்பெடுத்ததுண்டா?
  3. சினிமாப் பாடல் வரிகளை மணப்பாடம் செய்து அக்கதாநாயக மனோபாவத்துடன் வளரும் சிறுவர் பள்ளிகளில் சக சிறுமியை எப்படிப் பார்கிறார்கள் என்று தெரியுமா? (குழந்தைகள் பிற்காலத்தில் பெண்கள் ஆண்கள் மீதும், ஆண்கள் பெண்கள் மீதும்  வைக்கும் பாலியல் பார்வை எவ்வாறு அமையும்?)
  4. உங்களது குழந்தைப் பருவ இச்சைகளை நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
  5. புகழினால் உங்கள் குழந்தைகள் அடையும் இலட்சிய மாதிரி என்ன? அதனால் நீங்கள் அடையும் மனநிறைவை விளக்கமுடியுமா?
  6. இன்று படுக்கையறைப் பாடல்களை மேடையில் பெருமையாய்ப் பாடும் உங்களது குழந்தைகள் நாளை பெரியவர்கள் ஆனதும் அதைப் பதிவு செய்துக் காட்டுவீர்களா?
  7. அப்படிக் காட்டும்பொழுது நீங்களும், உங்களது மகன் அல்லது மகள் அடையும் உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?
  8. உங்கள் மகன், மகள் மேடையில் பாடும் முனகல் பாடல்களை தெருவிலும் பாட அனுமதிப்பீர்களா..அப்படி அனுமதித்தால் வரும் விளைவுகளை சந்திப்பீர்களா?
  9. குறிப்பாக பெண் குழந்தைகளை கவர்ச்சி உடைகள் அணிந்து காமப் பாடல்களை பாட அல்லது அதற்கு ஆட  ஊக்கப்படுத்தும் பெற்றோர்களே..அக்குழந்தை வளர்ந்து தெருவில் செல்லும் பொழுதும் அதே போண்ற உடை அணிய அனுமதிப்பீர்களா? (அதை நீங்கள் மறுக்கும் பட்சத்தில் புகழுக்காக அன்று நீங்கள் அனுமதித்தீர்களே என்று உங்கள் மகள் கேட்கக்கூடும்..)
  10. நல்லது கெட்டது என்ற இருமைகளுக்கு மாற்றாய் தவிர்ப்பது,மற்றும் ஒதுக்கப்படவேண்டியது என பலவகை உணர்ச்சிகளை அவர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்களா? அவை உள்ளனவென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
  11. உங்களது குழந்தையின் உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு அதனால் தோன்றும் மன உளைச்சலுக்கு நீங்கள் கூலி கொடுப்பீர்களா?
  12. உங்களைப் போன்ற பெற்றோரால் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல் நிறைந்த மன உளைச்சலுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வீர்களா?
  13. எல்லாவற்றிர்கும் மேலாய் அவர்கள் உங்கள் குழந்தைகளா இல்லை உங்கள் அடிமைகளா?
  14. ‘சிறுமி பாலியல் பலாத்காரம்’ என்று படிக்கையில் உங்கள் மனவோட்டம் எப்படி இருக்கும்? விளக்கமுடியுமா?
  15. பல்வேறு அரசியல் காரணங்களால் பின்தங்கியுள்ள குழந்தைகளின் நிலையை மாற்றியமைக்க நீங்கள் கொண்டாடும் ஊடகங்களும், நடிகர்களும் செய்துள்ளது என்ன என்பது பற்றி விளக்கமுடியுமா? 
விவாதிப்போம் பெற்றோர்களே.....அவர்கள் நம் குழந்தைகள் அல்லவா.

நன்றி :Face Book

இதில் சில  கேள்விகளுக்கு  விடைகளை நினைத்தாலே பயமாக இருக்கிறது...

1 comment:

  1. உண்மைய சொல்லியிருக்கீங்க!
    ‘பெரியவளாகும் போது எம்பொண்ணு சுட்டீஸ் க்ளப் ஹரிணி மாதிரி வரணும்’ என்று சொன்ன அம்மாவை நான் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete